சென்னை: Jayakumar criticize DMK: சென்னை காசிமேடு மீன்பிடித்துறைமுகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சுனாமி பேரலைத் தாக்கி 17 ஆண்டுகள் ஆன நிலையில் சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு மலர்த் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி, கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினார். அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது,
'மீனவர்கள் நலனில் அக்கறை கொண்டது அதிமுக அரசு. அதனால்தான் சுனாமிக்குப் பிறகு மீனவர்களுக்குப் பல இடங்களில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. வட சென்னையில் பல இடங்களில் சுனாமி குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
சுனாமி பாதிப்பிற்குப் பிறகு மீனவ மக்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தி தந்தது, அதிமுக அரசுதான். மீனவர்களுக்கும், தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் எந்த ஒரு நிவாரணமும் வழங்காதது, திமுக அரசு.
'ராஜேந்திரபாலாஜி விவகாரத்தில் திமுக அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளது'
ராஜேந்திரபாலாஜி பொருளாதார ரீதியில் குற்றம்சாட்டப்பட்டவர். அவரை ஒரு தேசத்துரோகி போல அறிக்கை அளித்து, வங்கிக் கணக்குகளை முடக்குதல் போன்ற செயல்களை திமுக செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள எத்தனை குற்றவாளிகளுக்கு இதுபோன்ற அறிக்கைகளும் அவர்களுடைய வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன. ராஜேந்திரபாலாஜியை வைத்து அதிமுகவை குற்றம்சாட்டும் செயலில் திமுக ஈடுபட்டு வருகிறது.
கடலூரில் கொலைக்குற்றவாளியான எம்.பி.,க்கு ஏன் இதுபோன்ற நோட்டீஸோ, வங்கிக் கணக்கு முடக்கமோ செய்யவில்லை. ஆளுங்கட்சி என்றால் ஒரு விசாரணை, எதிர்க்கட்சி என்றால் ஒரு விசாரணை என்ற முறையில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது.
இன்னும் சில நாட்கள் கடந்தால் மத்திய அரசிடம் கேட்டு ராஜேந்திரபாலாஜியைப் பிடிக்க ராணுவத்தை அழைத்துள்ளோம் என திமுக கூறும் நிலையும் ஏற்படும்.
ராஜேந்திரபாலாஜி குற்றவாளி அல்ல. அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. சட்டரீதியாக அவருக்கு முன் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க காலதாமதம் கொடுக்காமல் அதிமுகவை திமுக குற்றம்சாட்டி வருகிறது.
மைனாரிட்டி அரசு திமுக அரசு
மேலும் திமுக தமிழ்நாட்டில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. அதற்கு மாறாக தமிழ்நாட்டை சூறையாடி மொட்டை அடிக்கும் செயலில் திமுக ஈடுபட்டு வருகிறது.
மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலையை அமைத்து கொடுத்தது, அதிமுக அரசுதான். ஆனால், ஜெயலலிதா கூறிய மைனாரிட்டி அரசு மற்றும் இந்த விடியா அரசு ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மிகவும் சீர்குலைந்துள்ளது. காவல் துறைக்கு முழு அதிகாரம் கொடுத்து சட்டம் ஒழுங்கை அதிமுக ஆட்சி சரிவர பாதுகாத்து வந்தது.
ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையான காவல் துறை தான் தமிழ்நாடு காவல்துறை. ஆனால், காவல்துறையை நிர்வகிக்கும் தலைமை சரியில்லாததால் காவல் துறை சரியாக செயல்படவில்லை. அதனால்தான் தமிழ்நாட்டில் ஆளும் கட்சி மற்றும் ரவுடிகளின் அராஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
அரசியல் தமிழ் வியாபாரி திமுக
தமிழ்நாட்டில் அரசியல் தமிழ் வியாபாரி ஆகவே திமுக செயல்பட்டு வருகிறது. அதிமுக ஆட்சியில் உலகத்தமிழ் மாநாடு, உலகத் தமிழ் இணைய மாநாடு, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், மதுரை தமிழ் மன்றம் போன்றவை ஏற்படுத்தப்பட்டன. ஆனால், தமிழ் தமிழ் எனக் கூறி தமிழை அழிப்பதே திமுக தான்.
பொங்கல் பரிசு விவகாரத்தில் அதிமுக அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 வழங்கியது. ஆனால், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என திமுக பொங்கல் பரிசு அறிவிக்கவில்லை. எனவே தான், ஓட்டு போட்ட மக்கள் தற்போது அனுபவித்து வருகிறார்கள்.
மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் அதிமுகவை அழிக்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு அதற்கான வேலைகளை திமுக செயல்படுத்தி வருகிறது' என அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான மீனவர்களும், அதிமுக கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு சுனாமியில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படிங்க:Tsunami 17th memorial day: புதுச்சேரி அமைச்சர்கள் சுனாமி நினைவு தினத்தையொட்டி அஞ்சலி